கவிதைகள்


நினைவுகளில் விளக்கேற்றுவோம்!

posted Apr 26, 2014, 6:13 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:13 PM ]


நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,
வற்றிப் போகாமல்,
வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர்,
வடிந்தோடி நிறைத்திருக்க,
வடக்கிலும், கிழக்கிலும்.
வசந்தம் தேடியவர்களின்,
வாடிப் போன முகங்களில்,
கோடுகள் மட்டும் விழுகின்றன!
அரேபியாவின் பாலைவனங்களை,
அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக';
அரைக் காசுக்கும் பயனில்லாத,
அபிவிருத்தித் திட்டங்கள்
ஆயிரமாய் அரங்கேறுகின்றன!

அந்தக் காலத்து வாழ்வில்,
ஆடம்பரங்கள் இல்லை!
அரை வயிற்றுக் கஞ்சியும்,
ஆனையிறவின் அசைவில்!
ஆனாலும் வாழ்வில்,
அர்த்தம் இருந்தது!
வளவைச் சுற்றி வர,
வேலிகள் இருந்தன!
விடி வெள்ளி கூட.
அருகில் நெருங்கியது!
யாருக்குத் தெரியும்?
விட்டில் பூச்சிகளுக்கு,
விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று!

வினாக்கள் தொடர்கின்றன!
விடைகள் மட்டும்,
கண்ணாமூச்சி ஆடுகின்றன!
தாயைக் கட்டிப் பிடித்த,
சேயின் குரல்வளைகள் நெரித்துத்,
தாய் கூடப் பேயாகினாள்!
வென்றாலும், தோற்றாலும்
வீர மறவர்கள் நீங்கள்!
விடை பெற்றுப் போய்விட்ட,
வீராங்கனைகள் நீங்கள்!
விதையாகி விட்ட உங்களை,
வியாபாரப் பொருளாக்கி,
விற்பனைச் சந்தையில்,
விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!
வேதனையின் விம்மலுடன்,
விழி கனக்க நினைக்கிறோம்!
இழப்பின் பரிமாணம்.
ஏளனத்துடன் சிரிக்கின்றது!
நீங்கள் பாய்ந்த போது,
நாங்களும் பாய்ந்தோம்!
களம் வென்று வந்த போது,
புளங்காகிதம் கொண்டு,
வாழை மரங்கள் நட்டு,
விடுதலைக் கீதமிசைத்தோம்!
வானத்தில் பறந்த போது,
நாங்கள் கூடப் பறந்தோம்!

ஆனாலும்,
நீங்கள் வீழ்ந்த போதில்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை!
நாய்களைப் போல்,
நமக்குள்ளே போட்டிகள்!
கருவூலங்களின் திறப்புகளும்,
கை மாறி விட்டன!
அக்கினியில் குளித்தும்,
அழிந்து போகாத, சீதையின்
தூய்மை உங்களுக்கு!
உங்கள் கனவுகள்,.
நனவாகும், காலம் வரை,
நினைவுகள் சுமந்து.
நெஞ்சினில் விளக்கேற்றுவோம்! 

மாவீரர் நினைவுகளும், நாங்களும்..!

posted Apr 26, 2014, 6:08 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:09 PM ]


விரிந்த எனது தேசத்தின்,

பரந்து படர்ந்த வெளியெங்கும்,

அறைந்து நிற்கிறது வெறுமை!

 

நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை,

நம்பக்கூட முடியவில்லை!

 

உங்கள் நினைவுகள் சுமந்த,

உயிர்க்கூடுகள் மீது.

கோரை படர்ந்திருக்க,

எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால்,

உங்களுக்கு நிவேதனமாகின்றது!

அரவங கேட்டுச் சத்தமிடும்,

ஆட்காட்டிக்  குருவிகள்,

உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன !

 

எங்களுக்கெல்லாம் இப்போது,

இரண்டு விலாசங்கள்!

பிறந்த இடமொன்று,

மறையும் இடம் இன்னொன்று!

கிழக்கே உதித்து,

மேற்கில் மறைகின்ற,

சூரியன்களாக,

எங்களை நாங்களே,

உருவகித்துக் கொள்கிறோம்!

 

அரேபியப் பாலைவனங்களிலும்,

உருகும் பனிப் டலங்களிலும்,

எங்களால் வாழமுடிகின்றது!

 

நகருகின்ற ஒவ்வொரு வினாடியும்,

எங்கள் தேசம் தின்னப்படுகின்றது!

எங்கள் எச்சங்கள்,

கொஞ்சம், கொஞ்சமாக,

விழுங்கப்படுகின்றன!

 

குமர்ப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த,

தாய்களின் நிலையில் தான்,

எங்கள் வாழ்க்கை நகர்கின்றது!,

பருவகாலம் முடிந்ததும்,

பயிர் விளைக்க நினைக்கிறோம்!

 

நமது முடிவில்லாத பயணத்தின்,

நங்கூரமிட வேண்டிய நேரம்,

அண்மையில் வந்துவிட்டது!

 

இன்னும் தாமதித்தால்,

நாளை பிறக்கப் போகின்ற,

நம் பேரக்குழந்தைகளுக்கு ,

நல்ல கட்டுக்கதையொன்று,

கற்பனை செய்ய வேண்டும்!

 

ஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா!

posted Apr 26, 2014, 6:04 PM by வாடா மல்லிகை   [ updated Apr 27, 2014, 6:02 PM ]




தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின்,

கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும்,

சூரிய ஒளி நுழைய இயலாத,

செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும்,

பெரு வீதிகள் குவிகின்ற,

கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும்,

தினமும் பசித்திருக்கின்ற,

மனிதர்களின் வெற்று வயிறுகளிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!



ரொபின் தீவின் கரை தொடுகின்ற,

கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும்,

சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள்,

செதுக்கிய துவாரங்களில் புகுந்து,

வெளியில் வருகின்ற அனல்காற்று,

எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும்,

ஆருமற்று அனாதைகளாய் இறந்து.

புதைந்து போன சிறைக் கைதிகளின்,

உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!



காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி,

கடல் வெளிகள் தாண்டி வந்தும்,

கட்டியணைக்கவும் இயலாத,

காதல் மனைவியின் ஏக்கங்களிலும்,

கண்கள் உறங்காத இரவுகளின்,

கனத்துப்போன கண்ணிமைகளில்,

தேக்கிவைத்த ஏக்கக் கதைகளிலும்,

தடைவேலிகளாகி நடுவில் நிற்கின்ற,

தடித்த கண்ணாடிச் சுவர்களிலும்,

கிழிக்கப் பட்டும் படிக்கப்பட்டும்,

கறுத்தக் கோடுகளால் மறைக்கப்பட்ட,

காலாவதியான காதல் கடிதங்களிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!



சிறைக் கூடங்களின் மூலைகளில்,

செல்லரித்தும் தொலைந்தும் போன,

புத்தகங்களின் பக்கங்களிலும்,

சிறு தோட்டங்களின் ஓரங்களில்,

சின்னம் சிறிய சாடிகளில்,

இருந்தாற்போல முகம் காட்டுகின்ற,

‘டெய்சி' மலர்களின் புன் சிரிப்புக்களிலும்,

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் என்று,

தூர ஒதுங்கிய சிறைக் காவலர்களின்,

தூசு படர்ந்திருந்த மன வலைகளிலும்,

எப்போதாவது உனக்குக் கிடைக்கின்ற,

புகையிலைத் துண்டுக்காய்க் போட்டியிடும்,

கைதிகளின் கனத்த உள்ளங்களிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!

மானிடத்தின் பேராசை..!

posted Apr 26, 2014, 5:17 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:09 PM ]



கென்யா நாட்டின்,

கொடும் கோடையிலும்,

பனிக் கவசம் சுமக்கின்ற,

கிளிமாஞ்சரோ மலைக்குன்றின்,

அடிவாரத்தில்………!

 

பிளெமிங்கோ பறவைகள்,

உழுது கோடு வரைந்த நிலம்,

பாளம் பாளமாய்,

பிளந்து கிடக்கிறது!

 

பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள்,

புதைந்து மறைகின்ற,

சிறு தவளைக் குஞ்சுகள் கூட,

கதிரவனின் கொடுங்கரங்களின்,

வெம்மையை உணர்கின்றன!

 

நாளைய மேகங்களின்,

வருகைக்காக,

நம்பிக்கை சுமந்து,

அவை வாழ்ந்திருக்கின்றன!

 

இரக்கமில்லாத தரவைகளில்,

கருக்கட்டி வளர்ந்த,

பெரிய யானையின் தந்தங்கள்,

சிறிய மனிதனொருவனின்,

துப்பாக்கியின் வெற்றிக்குச்,

சாட்சியாகிக் கிடக்கின்றன!

 

தனது தோள்களில் கூடத்,

தூக்கிவைக்க முடியாத,

தந்தங்களின் பிரமாண்டம்,

அந்த யானையின்,

வரலாறு சொல்லி நிற்கின்றது!

 

வியாபாரிகளின் சந்தைகளும்,

வறுமையில் காய்ந்த வயிறுகளும்,,

நிரம்பாத வரைக்கும்......!

 

விலங்குகளின் மரணங்களுக்கு,

விலை குறைந்து போகாது!

 

நாளைய மழைத்துளிகள்,

நனைக்கப் போகின்ற,

ஏரியின் கரைகளில்,

மரங்கள் மட்டுமே வளரும்!

 

அவற்றை உண்பதற்கு,

அந்த யானைகள் இருக்காது!

 

அந்த மரங்கள் கூட,

ஒரு நாளில்……..!

 

மனித மிருகங்களின்,

மாளிகைகளின் சுள்ளிகளாகும்!

முடிவில்லாத பயணங்கள்

posted Jul 21, 2012, 9:43 PM by வாடா மல்லிகை   [ updated Jul 23, 2012, 7:06 PM ]


அதிகாலைப் பொழுதின்,
இருள் பிரியாத நேரத்தில்,
ஆயிரம் பயணங்களில்,
அதுவும் ஒரு பயணமாகியது!
அப்பாவின் பனித்த கண்களும்,
அம்மாவின் அன்புத் தழுவலும்,
அந்தத் தேங்காய் உடைத்தலில்,
அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,
கடவாயின் தந்தங்கள்,
கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,
சஞ்சலப் பட்டது மனம்!
விரியும் கனவுகளில்,
வருங்காலக் கேள்விக்குறி,
விரிந்து வளைந்து,
பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,
கானல் நீரின் கோடுகளாய்,
ஈரம் காய்ந்து போயின!
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,
காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,
போன பயணம் முடித்ததும்,
போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!
போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,
பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,
உடன் பிறந்த சொந்தங்கள்,
சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,
சுகம் தந்த காற்றின் வருடல்கள்,
விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!
வானத்தில் பறக்கும் பறவையின்,
விழிகளில் தெரியும் வடிவங்களாக,
விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,
நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,
படங்களில் மட்டுமே கிடைக்கும்,
பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,
இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,
திசை மாறிய பறவையாகித்,
தொடர்ந்து செல்கின்றது, பயணம்!
முடிவில்லாத பயணமாகி,
முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!


பொய்மை வெல்கின்றது!

posted May 12, 2012, 1:05 AM by வாடா மல்லிகை   [ updated Jul 23, 2012, 7:09 PM ]


மாரீசன் என்ற மாயமானில்,
மதியிழந்த சீதா தேவியின்,
மயக்கம் போல,
இரவு பகலாகத்,
தினமும் பூக்கின்ற,,
இணையத் தளங்களின் பூக்களால்,
பாலும், நீரும்
கலந்த கிண்ணத்திளிருந்து,
பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,
வல்லமையில்லாத,
பாவப் பட்ட அன்னப் பறவையாய்,
உண்மையும் பொய்யும்,
ஒன்றுடன் ஒன்று,
குலவிக் கலவும் , உலகத்தில்,
உண்மையைத் தேடுகின்றேன்!

பொன்னும், மணியும்,
புன்னகைகளும் அணிந்து,
பொய்மை வலம் வருகின்றது.
மண்ணின் மைந்தர்கள்,
என்ற கவசம் பூட்டித்,
தென்றல் காற்றின் மென்மையோடு,
பொய்மை உலா வருகின்றது.
புனிதமேனும் பேழையில்.
பத்திரமாகப் பூட்டிவைத்துப்,
பீடத்தில் அமர்த்தித்,
தூவிய அர்ச்சனைப் பூக்களிலும்,
துளித் துளியாய்ச் சிந்திய,
துவர்ப்புக் கலந்த,
வேர்வைத் தடங்களிலும்,
பொய்மை கலந்து விட்டது.

தர்மத்தின் முக மூடியைப்,
போர்த்துக் கொண்டு,
சர்வ தேச அரங்குகளில்,
சந்தனக் காவியினால்,
நொந்து சிதைந்து போன,
எலும்புக் கூடுகளையும்,
கண்ணீரில் நிதம் நனையும்,,
தலையணைகளின் ஈரங்களையும்,
மூடி மறைக்கின்றது.
அமாவாசைக் காலத்தின்,
கும்மிருட்டை நோக்கி,.
நம்மை அழைத்துச் செல்கிறது,

பாம்பையும், கயிற்றையும், 
பிரித்தறிய இயலாத,
அத்துவிதப் பெருவெளியின்,
அனாதைகளாய்,
அரிதாரம் பூசிய பொய்மை,
அழைத்துச் செல்கின்றது.
அர்த்த ராத்திரியின்,
இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,
அறிவென்ற விளக்கேந்தி,
அடையாளம் காண்போம்!
பொய்மைகளின் புகலிடத்தை,
வாய்மையால் அழித்திடுவோம்! 



ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

posted May 12, 2012, 12:52 AM by வாடா மல்லிகை   [ updated Jul 24, 2012, 9:56 PM ]


கலிகாலம் பிறக்கக்,
காத்திருக்கும் கபோதிகள்!
கண்ணீர்க் குமுறலுடன் ,
கண்ணில் விரிந்தது அவலம்!
காற்றையும் நஞ்சாக்கிய,
கனரக ஆயுதங்களின் குமுறல்!
கார்வண்ணன் தேரோட்டாத, 
குருசேத்திரப் போர்க்களம்! 
கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,
குருதியில் குளித்தன சருகுகள்!
கூட்டாக நடத்திய கொலைக்களம்..
கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!
கொஞ்சிக் குலாவுகின்றன,
காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,
கால் பட்ட தூசியும்,
காந்தீய தேசத்தின்.,,
கதை கேட்டு விலகியோடும்!
கலிங்கத்துப் பரணியில்,
கூழுண்ட பேய்களும்,
கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!
போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,
பாவத்தின் சின்னமாகும்!
பூவேந்தி நீ செல்லும்,
புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில்.
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

புதுமையான ஆண்டொன்று பிறக்கட்டும்!

posted Apr 27, 2012, 2:11 AM by வாடா மல்லிகை   [ updated Jul 23, 2012, 7:09 PM ]


புதுமைகள் ஏந்திய,
புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!
பூக்கள் மலர்வது போல!
புதுமையாக!
பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,
பிடுங்கி எடுத்து
மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,
சாதாரணமாக மலரட்டும்!
வெடிச்சத்தம் கேட்டாலே,
வேதனை கலந்த நினைவுகளே,
வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,
பட்டு வேட்டி சால்வைகளும்,
தொட்டுப் பார்க்க நேரமின்றித்,
தம் பாட்டில் தூங்குகின்றன!
சீர் கொடுத்த நகைகள் கூடச்,
சேரிடம் தெரியாது,
வருடக் கணக்காக,
வங்கிப் பெட்டிகளில்,
வருகின்ற தலைமுறை பார்த்து,
ஆறுதலாகத் தூங்குகையில்,
இன்னும் நகை எதற்கு?

கடுமையான காலத்தில்.,
கை கொடுக்க என்கிறோம்!
இதுவரை,
இல்லாத கஷ்டமா,
இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,
புதிய ஆண்டு பிறக்கட்டும்!
சொந்த நினைவோடு
சிந்தனையில் நிலைக்கட்டும்!
பரிசுகள் இல்லாமல்,
புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,
தலை காக்க வேண்டாம்!
தனக்கென எதுவுமில்லாமல்,
தவிக்கின்ற உறவுகளின்,
தன் மானத்தைக் காக்கட்டும்!

பண்ணைப் பாலங்கள்

posted Oct 23, 2011, 10:04 PM by வாடா மல்லிகை   [ updated Jul 23, 2012, 7:15 PM ]


பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்

தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,
கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை
கடற்காற்றில் கலந்து,
பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப
பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில்
கடற்காற்று மீட்டிய சங்கீதம்
அந்த மாலை நேரத்துப்,
பறவைகளின் ஒலியோடு கலந்தது!

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,
களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்
கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை
அகல விரித்துத் தவம் செய்ய,
மேல் வானத்துச் சூரியன்
தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்
சங்கமிக்கத் தயாராகினான்!

பாலத்தின் அடித்தளத்து மதகுகளின்
மேலே குந்தியிருந்த மீனவர்களின்
மூங்கில் தடித் தூண்டில்களில்
தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன்
அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள்,
ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி
விளையாடிக்கொண்டிருந்தன!

உன் கரையோரக் கண்ணா மரங்களின்
ஆகாயம் பார்த்த வேர்களின் மீது
ஓடி விளையாடிய சிறு நண்டுகள்
பாடசாலை முடிந்து
வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல
நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும்
கோலக் கரை போன்ற உந்தன் கற்களில்
ஒளிந்து கொள்ள இடம் தேடின!

பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த
கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த
தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும்
மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி
கல்லில் நாருரித்த எங்களுக்கு
நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,
பொருளே இல்லாதவர்களுக்குப்
பொருளாதாரம் காட்டிய பாதை நீ!

நிரை நிரையாகக்
கரையோரங்களின் இருந்த
வெள்ளைக் கற்கள் மட்டுமே
வழி காட்டி விளக்குகளாகப்
பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி
ஊர் சேரும் வரை.
உயிரைக் கையில் பிடித்த படி
உன் மடியில் ஊர்ந்த நாட்கள்
இன்றும் நினைவுகளில்!

பள்ளிப் படிப்பற்றுத்
துள்ளித் திரிந்த தலைமுறைக்குக்
கல்லூரி காட்டிய உன்னால்,
மூடிக் கிடந்த எங்கள் கதவுகள்
அகலத் திறந்து, நாங்கள்
அகிலம் எல்லாம் பரந்து விட
நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய்,
எல்லோரையும் கரையேற்றி விட்ட
கற்குவியல் பாதையாய் இன்னும்!!!

தாய்மை

posted Oct 23, 2011, 10:00 PM by வாடா மல்லிகை   [ updated Jul 23, 2012, 7:14 PM ]

பிரபஞ்சத்தின் அந்தகார இருளில்
மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில்
தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று!
பிரம தேவனின் பிரதிநிதியாய்
உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது
ஓட வைக்கும் அற்புதப் படைப்பு!

கருவை வளர்த்தெடுத்து, அதன்
கண்ணையும்,மூக்கையும்
கற்பனையில் வடித்துக்
குருதியில் குளித்துச்
சிலையாய் வடித்தெடுக்கும்
ஒரு சிற்பியின் திறமை!

குழந்தையின் முகம் பார்த்துக்
காலம் காலமாய்க்
கட்டி வைத்த ஆசைகளின்
கனவுக் கோட்டையைக்
கணப்பொழுதில்
உடைத்தெறியும்
ஒரு முனிவனின் முதிர்ச்சி!

நோய் கண்ட வேளையில்,
இரவும் பகலும்,
அரைக்கண் மூடி,
நீ கொள்ளும் அனந்த சயனத்தில்
பாற்கடலில் பள்ளிகொள்ளும்
அந்தப் பரந்தாமனின் பக்குவம்!

பூவைத் துளைத்து அதன்
மகரந்தக் கூட்டுனுள்
முட்டையிடும்
பூச்சியைப் போல்
குழந்தை வளர்ப்பில்
குறுக்கு வழி தேடாத
உன் நேர்மை!

உறங்கும் வேளையில்
நீ பாடும் தாலாட்டின்,
ஏற்ற இறக்கத்தில்
ஒலிக்கும் உன் குரல்
நான் இது வரை
கேட்காத சங்கீதம்!

வளர்ந்த குழந்தைகள்
வேறு வேறு திசைகளில்
விதம் விதமாய்
வாழ்கையில்.
உன் மனம் மட்டும்
வறுமையில் வாடும்
குழந்தையின் பின்னால்!
எனக்குப் புரியாத
சோசலிசம்!

குழந்தையின் வாழ்வே
உன் வாழ்வின்
வரைவிலக்கணமாய்,
பிரதிபலன் பாராது
நீ செய்யும்
சேவைகள் தான்
பகவத் கீதையின்
சாராம்சம்!!!

1-10 of 14

Comments