எங்களுர்க் கண்ணகி

posted Oct 23, 2011, 9:52 PM by வாடா மல்லிகை   [ updated Jul 23, 2012, 7:15 PM ]


இந்துமா சமுத்திரத்தின் பேரலைகள்,

ராமர் அணையில் மோதித்தெறித்து,

வெள்ளித்திவலைகளாய், வெண்ணிறமாய்,

எங்கள் ஊரின் சேலைக் கரையாய்

விந்தைகள் காட்டின.


எங்கள் கடற்கரையில் கண்ணகி கோவில்,

ராஜதானியாய் உயர்ந்து நின்றது.

எங்கள் ஊரின் தண்ணீர்க் குடமாய்,

மாலை நேர விளையாட்டு மைதானமாய்,

காலி முகத் திடலாய், பல வடிவம் எடுத்தது.

விழாக் காலங்களில்,

அன்னதான மடமாய், அங்காடியாய்,  

புது வடிவம் எடுக்கும்.


ஆரியக் காற்றின் மூச்சுக்கள் படாத,

அழகான தமிழ்த் தெய்வம் நீயானாய்.

ஆயிரம் உறவுகள் உனக்கு இல்லை.

மனுதர்மம் கூட உன்னிடம் மண்டியிட்டது.

இந்திரனோ அல்லது சந்திரனோ,

உனக்குச் சொந்தமாகவில்லை

கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எச்சமாய்,

நீ தப்பிப் பிழைத்திருக்கிறாய்.

அகிலத்தையே வடிவமைத்த

அதிசயத் தெய்வங்கள் எங்கள் மூர்த்திகள்.

வடதிசை, கீழ்த்திசை வாசல்கள்,

அவர்கள் கோவில்களின் வடிவமைப்புகள்..

அனல் பறக்கும் உனது தமிழ் முகத்தின்

'கனல்' ஊரை எரித்து விடுமாம்.

தென் திசையின் கடல் பார்த்து,

மோனத்தவநிலையில் நீ.

உனது தல புராணமும் தனித்துவமாய்,
கனவுகளில் வந்து கண்ணுறக்கம் கலைக்காமல்,
கலங்கரை விளக்கடியில்,
பேழையாய்க் கிடந்தாயாம்.

ஊரார் உன்னைத் தூக்கி வரப்
பாரமாய்ப் போய் விட்டாயாம் நீ!
அதுவே நீ தெரிந்த இடமாக,
அதிலே உனக்குக் கோவில் கட்டினராம்.


மணி பல்லவம் உனக்குக் கசந்தது.

கோவலனும் மாதவியும் கூடிய வாழ்வின்

பாவத்தின் சாட்சியமாய் மணிமேகலை.

தன்மானத்தின், தமிழ் மானத்தின்,

வீரச்சின்னமாய்,

தமிழ்ப் பெண்ணின் வரைவிலக்கணமாய்,

எங்களூரின் காவல் தெய்வமாய் நீ.

Comments