கலிகாலம் பிறக்கக், காத்திருக்கும் கபோதிகள்! கண்ணீர்க் குமுறலுடன் , கண்ணில் விரிந்தது அவலம்! காற்றையும் நஞ்சாக்கிய, கனரக ஆயுதங்களின் குமுறல்! கார்வண்ணன் தேரோட்டாத, குருசேத்திரப் போர்க்களம்! கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில், குருதியில் குளித்தன சருகுகள்! கூட்டாக நடத்திய கொலைக்களம்.. கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்! கொஞ்சிக் குலாவுகின்றன, காந்தீயக் கோழைகள் !
கலிங்கத்து மன்னனின், கால் பட்ட தூசியும், காந்தீய தேசத்தின்.,, கதை கேட்டு விலகியோடும்! கலிங்கத்துப் பரணியில், கூழுண்ட பேய்களும், கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்! போதிமரம் காணும் புதிய குருத்துக்கள், பாவத்தின் சின்னமாகும்! பூவேந்தி நீ செல்லும், புத்தனின் தூபிகள், போர்குற்றம் ஏந்தி நிற்கும்!
துருபதா தேவியின், துகில் களைந்தவன் கூடத். தூயவனாகி விட்டான்! உயுருள்ள பெண்ணொன்றின், உடைகள் கலைகையில், ஓடிவந்தான், கண்ணன்! ஓவென்ற அலறலில், நாங்கள் அழுகையில். ஓடி ஒளித்தான்,அவன்! கருகிய பயிர்களும், கண் விழிக்கும் காலம், கண் முன்னே விரிகிறது! உரிமையின் தேவையின், உண்மையின் உணர்ச்சியில். ஒன்றாகக் கரம் கூட்டுவோம்! |