சதுரங்கம்

posted Apr 28, 2014, 2:39 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:39 AM ]
சதுரங்க மேடையில்......!

அனைவருமே,
ஆயுதங்கள் தாங்கியவர்கள்!

தாக்குபவனும்.
தாக்கபடுபவனுக்கும்,
தப்பிகொள்ளச் சந்தர்ப்பங்கள்,
தரப்பட்டிருக்கின்றன!

வெற்றியைக் குறுக்கு வழியில்,
பெற்றுக் கொள்ளாமலிருக்க,
விதிகளும் வரையப்பட்டுள்ளன!

மறு கரையைத் தொட்டுவிட்டால்,
மீண்டுமொரு ராணியாக,
மண்ணை மீட்டுக்கொள்ள,
மீண்டுமொரு சந்தர்ப்பம்!

ஆனால்,
நிஜ வாழ்வில் .....!

விதிகள் செத்துமடிகின்றன!

வெறும் பதுங்கு குழிகளே,
வதிவிடங்களாகின்றன !

பெண்கள், குழந்தைகள்,
பொல்லூன்றி நடக்கும் வயோதிபர்,
எல்லோருமே போர்வீரர்கள்!

குதிரைகளுக்க்ப் பதிலாகக்,
குண்டு வீசுகின்ற,
ஆகாயப் பறவைகள்.!

வெற்றிக் களிப்புகளின் பின்னர்,
வெறும் பலகை மட்டுமே,
மிஞ்சியிருக்கின்றது!

இன்னுமொரு ஆட்டத்திற்கு,
எவரும் உயிருடன் இல்லை!

Comments